அவுஸ்திரேலியாவில் ஒரு இரவு வேளை மதுபானச் சாலைக்குள் வழமைபோன்ற கூட்டம். அந்தக் கூட்டத்தின் நடுவே புகுந்தார் ஒரு விசித்திர விருந்தாளி. வேறு யாருமல்ல அவுஸ்திரேலியாவில் நன்கு பழக்கமான கோலா என்ற விலங்கு தான் உள்ளே புகுந்தது. கோலாவைக் கண்டதும் அங்கு பெரும் சந்தடி ஏற்பட்டது.
இந்த மதுபானச் சாலையின் உத்தரமொன்றில் ஏறியமர்ந்த கோலா அங்கு அப்படியே உறங்கிவிட்டது. கடந்த சனிக்கிழமை இரவு குயின்ஸ்லாந்தின் மக்னடிக் தீவில் உள்ள மர்லின் மதுபானச் சாலையில் தான் இந்த வினோதம் இடம்பெற்றது.
கெவின்மார்டின் என்ற ஊழியருக்கு அருகில் வந்து அவரை ஒரு முறைமுறைத்துவிட்டு பக்கத்தில் இருந்த பலகைத் தூண் வழியாக மேலே ஏறி உத்தரத்தில் உறங்கிவிட்டது. “என்ன வேண்டும் உங்களுக்கு இங்கே வருவதற்கான அடையாள அட்டை இருக்கின்றதா என்று கேட்டேன் அதுதான் அவருக்குக் கோபம் வந்து முறைத்துவிட்டார்” என்று அந்த ஊழியர் நகைச்சுவையாகக் கூறினார்.
பின்னர் வனஇலாகா ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு கோலா அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. அவர்கள் அதைக் கொண்டுபோய் தீவின் வேறு ஒரு பகுதியில் சுதந்திரமாக விட்டுவிட்டனர். வெளியே மழை பெய்துகொண்டிருந்ததால் வேறு வழியின்றி உள்ளே வந்த கோலா உள்ளே சீதோஷ்ண நிலை பிடித்துப் போகவே உறங்கிவிட்டது என்று சிலர் கூறினர்

